Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday, February 28, 2012

இந்த வண்டிக்கு கியர் இல்லைங்க (கியர் வண்டி -2)



நந்தனுக்கு கல்லூரி முடியும் தருணத்தில் அவனது அக்கா வீட்டு புதுமனை புகும் நிகழ்வு வந்தது.இந்த மாதிரி குடும்ப நிகழ்வுகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை இருக்குமே.அக்காவின் புது வீடு அந்த ஊர் பஸ்ஸ்டாண்டிலிருந்து ரெண்டு கி.மீ.தூரம்.அதனால நிகழ்ச்சிக்கு வருபவர்களை பஸ்ஸ்டாண்டுல இருந்து டூ வீலர்ல கூட்டிட்டு வரணும்.இந்த பொறுப்பை மாமாட்ட சொல்லி எப்படியாவது வாங்கிடம்னு மாமாக்கிட்ட,”மாமா நான் வர்றவங்கள பஸ்ஸ்டாண்டில இருந்து வண்டியில கூட்டிட்டு வந்துடறேன்” அப்படின்னான்.டே,உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா?அப்படின்னு மாமா கேக்க,என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க,பாருங்க லைசென்ஸ் வைச்சிருக்கேன்.அப்படின்னான் நந்தன்.என்னடா ஆட்சி பிடிக்க கட்சி ஆரம்பிச்சா போதும்ங்கற மாதிரி சொல்ற.சரி ஓகே.சரி,சரி நீயும் செல்வாவும் இந்த வேலையை பாத்துக்கங்க.இந்தா சாவி.இன்னொரு சாவியை அவன்கிட்ட கொடுத்துடு.அவன்கிட்ட கொடுத்துடு.

                                                         
சந்தோசமாக சாவியை வாங்கிக்கிட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணிட்டு திருதிருன்னு முழிச்சான்.என்னடா முழிச்சுக்கிட்டு நிக்கறன்னு மாமா கேக்க ஒண்ணுமில்ல மாமா கியர் விழல அப்படின்னான்.பாத்தா பின்னாடி காலை வைச்சு அமுக்கு அமுக்குன்னு அமுக்கிகிட்டு இருந்தான்.டே,டே,கியர் லிவர ஓடச்சுடாதடா,இந்த வண்டியில கியர் முன்னால அமுக்கனும் அப்படின்னார்.டே,வண்டி ஒட்டுவியாடா?ஆரம்பமே சரியில்லையேனு மாமா பதற ,அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா நான் ஓட்டுன வண்டியில கியர் பின்னால அதான் சின்ன குழப்பம்.அப்படின்னு சமாளித்து கிளம்பினான்.


போயிட்டு வந்ததும்,ஒரு வழியா போயிட்டு வந்துட்டியாடா,பரவால்லியே,சரி சரி வேற யாரும் வந்து போன் பண்ணா போய் கூட்டிட்டு வா நான் பந்தல்காரங்களை பாத்துட்டு வரேன் அப்படின்னு வண்டியை எடுத்துக்கிட்டு கிளம்பினார்.இப்ப இருந்தது செல்வாக்கிட்ட கொடுக்க சொன்ன வண்டி.நமக்கு அடிச்சதுடா அதிர்ஷ்டம் ஒரே நாள்ல ரெண்டு வண்டி ஓட்ட வாய்ப்புனு பூரிப்படைந்தான்.சின்னதாத்தா வந்திருப்பதாக போன்வர போய் கூட்டி வந்தான்.வருவதற்குள் மாமாவும் வந்திருக்க என்னடா இந்த வண்டியில கியர் ஒழுங்கா போட்டு ஒட்டுனியா?அப்படின்னார்.ஒன்னும் பிரச்சினையில்ல மாமா ஆனா நாளாவது கியர்ல போகும் போது கூட வண்டி முக்குது என நந்தன் கேக்க,அடப்பாவி இதுல அஞ்சு கியர் இருக்குடா.பெட்ரோல் விக்குற விலையில இப்படி ஒட்டுனா லிட்டருக்கு முப்பது கி.மீ.கூட கொடுக்காதுடா அப்படின்னு மாமா எகிற விடுங்க மாமா அடுத்தமுறை பாத்துக்கலாம்னு சமாதானப்படுத்தினான்.
                                              

                                                         

இந்த முறை செல்வா ஒரு வண்டியும்,மாமாவின் தம்பி இன்னொரு வண்டியும் எடுத்துக்கொண்டு எங்கோ சென்றுவிட,சித்தி வந்திருப்பதாக அழைப்பு வந்தது.பெரியப்பா வந்திருந்த வண்டியை கொடுத்து போய் கூட்டி வருமாறு சொன்னார்.நந்தனுக்கு சந்தோசமோ சந்தோசம் பின்னே கியர் வண்டியே ஓட்ட வாய்ப்பு இல்லாமலிருந்தவனுக்கு இன்றைக்கு மூணாவது வண்டி.ஸ்டார்ட் பண்ணிட்டு கொஞ்ச தூரம் போயிட்டு திரும்பி வந்தான்.மாமா என்னடா என்ன ஆச்சுனு கேக்க,மாமா இந்த வண்டியில பர்ஸ்ட் கியருக்கு மேல விழமாட்டேங்குது என்னன்னு பாருங்க அப்படின்னான்.ஒரு முறை முறைச்சுட்டு டே உன்ன கொல்லப்போறேன்,இந்த வண்டியில முத கியர் பின்னாடி மத்ததெல்லாம் முன்னாடினு கத்தினார்.ஹிஹி சரி மாமா விடுங்க மாமா.போயிட்டு வந்துடறேன்.( எவண்டா ஒவ்வொரு வண்டிக்கும் ஒவ்வொரு மாதிரி கியர் வைச்சான்).


ஒரு வழியா நிகழ்ச்சி முடிஞ்சுது.ஊர்ல இருந்து அத்தை கொஞ்சம் லேட்டா வந்து போன் பண்ணாங்க.அந்த நேரம் பாத்து எந்த வண்டியும் இல்ல.மாமா பக்கத்து வீட்டுல ஒரு வண்டி வாங்கி வந்து போடா போய் அத்தையை கூட்டிட்டு வா,எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு அப்படின்னு நந்தன்கிட்ட சொன்னார்.(இன்னமுமா இந்த உலகம் நம்மை நம்புது)சரி மாமா இதோ போய் வந்துடறேன் சாவி கொடுங்க.கொஞ்ச நேரம் வண்டியை சுத்தி சுத்தி பாத்துட்டு கேக்கலாமா வேணாமான்னு கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு இருந்தான்.நந்தன் தயங்கி தயங்கி நிக்குறத பாத்தா மாமா டே என்னடா இன்னும் நின்னுக்கிட்டு இருக்க?இந்த வண்டியில கியர் இல்ல மாமா?அப்படின்னான்,டே என்னடா இந்த இளநில தண்ணி வரலன்னு சொல்ற மாதிரி சொல்ற இது ஸ்கூட்டி பெப்டா இதுக்கு கியர் கிடையாது.அத சொல்லலாம்ல ரொம்ப நேரமா தேடிக்கிட்டு இருக்கோம்ல னு சொல்ல அத்தைக்கு போன் போட்ட மாமா ,நீங்க கொஞ்சம் சிரமம் பாக்காம நடந்தே வந்துடுங்க அப்படின்னு போன் வைச்சுட்டு நந்தனை ஒரு பார்வை பார்த்துட்டு போய்விட்டார்.



என்னங்க நந்தனுக்கு அவங்க அப்பா கியர் வண்டி வாங்கி கொடுத்திருப்பாரா?


மேலும் வாசிக்க "இந்த வண்டிக்கு கியர் இல்லைங்க (கியர் வண்டி -2)"

Friday, February 24, 2012

கியர் வண்டி



கியர் வண்டி ஓட்டுவது ஒருகலை அப்படின்னே சொல்லலாம்.ஸ்டார்ட் பண்ணி க்ளர்ட்ச் புடிச்சு முதல் கியர் போட்டு மெதுவா க்ளர்ட்ச் ரிலீஸ் பண்ணி  அதே நேரத்துல ஆக்சிலேட்டர் கொடுத்து வண்டியை கிளப்பனும்.கிளர்ட்ச் விடுரத்துக்கும் ஆக்சிலேட்டர் கொடுக்குறத்துக்கும் டைமிங் ரொம்ப முக்கியம்.ஒண்ணு கிளர்ட்ச் வேகமா விட்டா வண்டி ஆப் ஆகிடும்,ஆக்சிலேட்டர் வேகமா கொடுத்தா வண்டி கவுத்து விட்டுடும்.அது மட்டுமில்லாம வண்டியின் வேகத்துக்கு ஏத்த மாதிரி கியர் குறைக்கனும்,கூட்டணும்.இப்படி பல டெக்னிக்குகள் இருக்கு கியர் வண்டி ஒட்றதுல.

நந்தனுக்கு சின்ன வயசுல இருந்தே கியர் வண்டி என்றாலே அப்படி ஒரு இஷ்டம்.அவங்க வீட்டுப்பக்கத்துல ஏதாவது வண்டி வந்து நின்னாலே போதும் கிட்டப்போய் நின்னு தொட்டுப்பாத்து பரவசமடைவான்.அவனே ஓட்டுவது போல பாவனை செய்து கற்பனை வானில் மிதப்பான்.திப்பி வியாபாரம் செய்யும் பழனிசாமி ஒரு பழைய மாடல் ராஜ்தூத் வைத்திருந்தார்.அதுல ஸ்டார்ட் பண்ணும் ஸ்டையில் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.ரெண்டு மூணு தடவை படக்,படக்குன்னு மிதிச்சு வேகமா உதைச்சா தான் அது ஸ்டார்ட் ஆகும்.சில சமயம் அப்படியும் ஸ்டார்ட் ஆகாது அவர் என்னென்னமோ பண்ணுவார் ஏதேதோ பாகங்களை அமுக்கிவிட்டும்,வயர்களை இழுத்துவிட்டும் எப்படியோ ஸ்டார்ட் செய்து போவதை வியப்புடன் பார்ப்பான்.

சொசைட்டியில வேலை செய்யுற செல்வம் வைச்சிருந்தது டபுள் சைலன்சர்  இருக்கும் ஜாவா பைக்.அதுல ஸ்டார்ட் பண்ற கிக்கர்,கியர் லிவர் ரெண்டும் ஒண்ணுதான்.ஸ்டார்ட் பண்ணுனப்பறம் அந்த கிக்கரையே முன்னால தள்ளிவிட்டு கியர் போடணும்.செல்வம் வண்டியை சீமண்ணை போட்டு தான் வண்டி ஓட்டுவார்.இதுக்காக வண்டியில ஒரு செட் அப் பண்ணியிருப்பார்.வண்டி ஸ்டார்ட் பண்ண மட்டும் பெட்ரோல் அதுக்கப்பறம் இன்னொரு டேப் திறந்து சீமண்ணைல ஓட்ட ஆரமிப்பார்.ஊருக்கு இலவச கொசு மருந்துதான்.தூரத்துல வரும் போதே செல்வம் வரார்னு ஊருக்கே தெரியும்.


இப்படியெல்லாம் பார்த்து பார்த்து நந்தனுக்கு கியர் வண்டிகள் மீதான காதல் பெருகிக்கொண்டே இருந்தது.ஆனா இந்த கனவுகளை நிஜமாக்கும் வாய்ப்பு அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடவில்லை.நந்தன் கல்லூரியில் சேர்ந்த போதும் தங்கிய ஹாஸ்டலில்இருந்து கல்லூரி பக்கம் என்பதால் அங்கே யாரும் கியர் வண்டி வைத்திருக்கவில்லை.டே ஸ்காலர்  பசங்க ரெண்டு பேர் வைச்சிருந்தாங்க.ஆனா எப்பவுமே டேஸ்காலர் பசங்க ஹாஸ்டல் பசங்க கூட ஒட்ட மாட்டாங்கஅதனால அவ்வளவு சீக்கிரம் நந்தன் அந்த பசங்ககிட்ட வண்டி ஓட்ட கத்துக்கும் ஆர்வத்தை சொல்லல.கல்லூரிப்பருவத்தில பசங்ககிட்ட இதுபோன்ற வேறுபாடுகள் ரொம்ப நாள் நிலைக்காது.முதலாமாண்டு கடந்ததும் எல்லா பசங்களும் ஒண்ணோட ஒண்ணா பழக தொடங்கிட்டாங்க.

அதான் எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணாகியாச்சே இப்ப நம்ம ஆசையை நிறைவேத்திக்கலாம்னு ஸ்ப்லண்டர் வைச்சிருந்த கிருஷ்ணாகிட்ட சொன்னான்.கிருஷ்ணா “அதுக்கென்ன மச்சி தாராளமா கத்துக்கோ அப்படின்னு கத்துக்கொடுத்தான்.தன் வாழ்நாள் லட்சியம் நிறைவேறிய மகிழ்ச்சியை அடைந்தான் நந்தன்.


எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போல ரெண்டு நாள் ஒட்டியது அவனுக்குள்ளிருந்த கியர் பைக் தாகத்தை அதிகமாக்கியது.கிருஷ்ணா வண்டியை வைச்சே டூ வீலர் லைசன்சும் வாங்கிட்டான்.அந்த வண்டியைத்தவிர வேறு வண்டி ஓட்ட வாய்ப்பும் கிடைக்கவில்லை.வீட்டில் பைக் வாங்கித்தர சொல்லி நச்சரிக்க ஆரம்பித்தான்.வீட்டில் படிப்பு முடிந்ததும் வாங்கித்தருவதாக அப்பா ஆசைக்கு அணை போட்டதும் காவிரிக்காக,முல்லைப்பெரியாருக்காக ஏங்கும் தமிழகம் போல படிப்பு முடியக்காத்திருந்தான்.

கதையை ஒரே பதிவில் முடிக்கலாம் என்றிருந்தேன் கொஞ்சம் நீளமாக செல்வதால் அடுத்த பதிவில் முடிக்கலாம் கதையின் போக்கை கொஞ்சம் கற்பனை செய்து காத்திருங்கள்.


படங்கள்-கூகுள் இமேஜ்.
மேலும் வாசிக்க "கியர் வண்டி"

Saturday, February 11, 2012

கொரங்கு பெடல்


கார்த்தி அஞ்சாவது வரைக்கும் படிச்சது அவங்க ஊரான மங்களபுரத்திலிருந்து  இருந்து ஒரு அஞ்சு கிலோமீட்டர் தூரத்திலிருக்குற ஆயில்பட்டிங்கற ஊர்ல.ஸ்கூலுக்கு போய் வர்றது எல்லாம் ஸ்கூல் வேன்ல தான்.அதுக்கப்பறம் ஆறாவது போகும் போது இந்த ஊரிலே இருக்குற கவர்மெண்ட் ஸ்கூல்ல சேத்து விட்டுட்டாங்க.இந்த ஸ்கூல் அவனோட வீட்டிலிருந்து ஒரு ஒன்னரை கிலோமீட்டர் தான் இருக்கும்.அக்கம் பக்கதிலிருக்குற பசங்க பொண்ணுங்க கூட சேர்ந்து நடந்தே போயிட்டு வந்துடுவான் வீட்டுக்கு.வழியில் அவரவர் எடுத்து வரும் நொறுக்கு தீனிகளின் பரிமாற்றத்துடன் குதூகலப்பேச்சும்,கேலி,கிண்டலுடன் நடை களைப்பு கரைந்திருக்கும்.

ஏழாவது போகும் போது பக்கத்து வீட்டு பொண்ணு பானு சைக்கிள் வாங்கி ஸ்கூலுக்கு போவதைப்பார்த்து நாமளும் சைக்கிள் ஓட்ட கத்துக்கணும்னு நினைச்சுக்கிட்டான்.அப்ப அவங்க வீட்டில இருந்தது ஒரு பெரிய சைக்கிள்.கால் எட்டாது.பானு கார்த்திக்கை விட கொஞ்சம் உயரமானவ.அதனால அவ ஈஸியா சைக்கிள் கத்துக்கிட்டா. நம்மாளு கொஞ்சம் கூலையா(குள்ளமா) இருப்பான் பெரிய சைக்கிள்ள கொரங்கு பெடல் போட்டு ஒட்டி கத்துக்கிட்டாத்தான் அப்புறம் கம்பி மேல ஒக்காந்து ஓட்ட முடியும்.இதுக்கு நடுவில கீழ விழுந்து முட்டி பேந்து,இன்னும் சைக்கிளுக்கு ஏதாவது ஆகிட்டா அப்பா வேற அடி பின்னிடுவாரே!அதுவுமில்லாம கொரங்கு பெடல் போட்டு சிக்கி ஓட்டுறத பானு பாத்தா அசிங்கமாயிருக்குமே இப்படியெல்லாம் அவன் மனசுக்குள்ள ஓடுச்சு.

                                                                

கார்த்தி பிரண்டு செந்தில் குட்டி சைக்கிள் வைச்சிருந்தான்.அவனுக்கு கோணபுளியாங்கா எல்லாம் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணி டெய்லி ஒரு மணிநேரம் சைக்கிள் பழக சம்மதம் வாங்கிட்டான்.மொத ரெண்டு நாள் செந்தில் பிடிச்சுக்க ஒட்டி பழக ஆரமிச்சான் நாலைஞ்சு நாள்ல அப்படி இப்படின்னு ஓட்ட கத்துக்கிட்டான்.அப்பப்போ வீட்டிலிருந்த பெரிய சைக்கிள்ல யாரும் பாக்காதப்ப கொரங்குபெடலும் போட்டுப்பாத்தான் ஒரு தடவ சைக்கிள்செயின் கடை விழுந்து  இவன் முட்டி பேந்துடுச்சு.அதைக்கூட பாக்காம சைக்கிளுக்கு அதாவது ஆயிடுச்சான்னு பாத்து நைசா கொண்டாந்து வீட்டுல விட்டுட்டான்.வழக்கமா போடுவதை விட கொஞ்சம் கீழே இறக்கி டவுசர் போட்டுக்கிட்டான் காயம் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு.

அதுக்கப்புறம் கொரங்குபெடலை கொஞ்ச நாளைக்கு மறந்து செந்தில் சைக்கிள்லயே பழக ஆரமிச்சான்.அப்படியே அவனையே வைச்சு டபுள்சும் வைச்சு ஓட்ட கத்துக்கிட்டான்.அப்படியே அவங்க அப்பாகிட்டையும் ஒட்டிக்காமிச்சு பெரிய சைக்கிளை எடுத்து பழக அனுமதியும் வாங்கிட்டான்.
                        
குட்டி சைக்கிளோட்டி பழகியிருந்தாலும் பெரிய சைக்கிளில் காலைத்தூக்கி மேலே போட முடியவில்லை இரண்டு பெடலிலும் முழுசாக ஒரு ரவுண்டு அழுத்த கால் எட்டவும் இல்லை.மறுபடியும் கொரங்குபெடல்தான்.குட்டி சைக்கிள் நல்லா ஒட்டி கத்துக்கிட்டதால இப்ப கொரங்கு பெடல்ல கீழ விழாம ஓட்ட ஆரமிச்சான்.

அப்பறமா ஒரு நாள் செந்திலுக்கும் இவனுக்கும் ஒரு போட்டி வந்தது.கொரங்கு பெடல் போட்டு ஸ்பீடா ஓட்ட முடியாதுடா அப்படின்னான் செந்தில்.நான் உன்ன விட ஸ்பீடா போய் காட்டுறேன்னு சொல்லி பொட்டிய ஆரமிச்சாங்க கார்த்திதான் முன்னால போனான் ஆனா கொஞ்ச தூரத்துல பானு வர்றத பாத்து வெக்கப்பட்டுகிட்டு சைக்கில நிறுத்திட்டான்.செந்தில் பாத்தியா நான்தான் ஜெயிச்சேன்னு சொன்னான் .கார்த்தி அதுக்கு இல்ல ஏன் சைக்கிள்ல ஸ்போக்ஸ் கம்பி ஒண்ணு கழன்டுகிச்ச்சு அதான் நின்னுட்டேன்னு சொன்னான்.அதெல்லாம் இல்லேன்னு ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்க பானு பக்கத்துல வந்து என்னான்னு கேட்டா செந்தில் விசயத்த சொல்ல ஆரம்பிக்க கார்த்தி தடுத்தான்ஆனா செந்தில் சொல்லிட்டான்.பானு ஸ்போக்ஸ் கம்பியை பாத்துட்டு கம்பி நல்லாத்தான இருக்கு அப்புறம் ஏன் நின்னுட்ட அப்படின்னு கேக்க,கார்த்தி தயங்கி தயங்கி,உன்ன பாத்ததால தான் நின்னுட்டேன் அப்படின்னான்.பானு அதுக்கு ஏன்னு கேட்டா.இல்ல உன் முன்னாடி கொரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்ட வெக்கமா இருந்துச்சு அதான் அப்படின்னான்.அதுக்கு பானு மக்கு!மக்கு! நானும் மொதல்ல சைக்கிள் கத்துக்கும் போது கொரங்கு பெடல் போட்டுத்தான் கத்துக்கிட்டேன் அப்படின்னா.
அப்போ கார்த்தி ஏதோ பானுவிடம் கேட்க நினைத்து வாயெடுத்து வார்த்தைகளை முழுங்கிக்கொண்டான்.
 __________________________________________________________________________________________________________________________
 கார்த்தி பானுவிடம் என்ன கேட்டிருப்பான்?உங்கள் கற்பனைக்கே.......
சத்தியமாக இதற்கு என்னிடம் பதில் இல்லை.
சில விளக்கங்கள்-கோண புளியாங்கா –கொடுக்காப்புளி
செயின் கடை விழுதல்-கழண்டு விழுதல்
___________________________________________________________________________________________________________________________
கதைக்கு இன்னுமொரு கிளைமாக்ஸ் – பானு அப்படி சொன்னதும் கார்த்தி இப்ப வாடா செந்திலு பாக்கலாம் அப்படின்னு போட்டிய திரும்பவும் ஆரமிச்சாங்க.இப்ப யாரு ஜெயிச்சாங்கன்னு நான் சொல்லனுமா என்ன?
___________________________________________________________________________________________________________________________
மேலும் வாசிக்க "கொரங்கு பெடல்"

Monday, December 12, 2011

குடிகாரன் பேச்சு விடிஞ்சா ???


ஏண்டா இன்னைக்கு ஊருக்கு கிளம்பினோம் என்று அந்த பேருந்து நிலையக்கூட்டத்தை பார்த்தவுடன் தலையில் அடித்துக்கொண்டான்  கபிலன்.எல்லாரும் அப்படி எங்கதான் போறாங்க என ஒவ்வொருத்தரையும் நிறுத்திக்கேட்க துடித்தான்.திருப்பி அதே கேள்வி அவனிடம் யாராவது கேட்டால்.?அதனால் பல்லைக்கடித்துக்கொண்டு வரப்போகும் பேருந்துக்காக காத்திருந்தான்.


பேருந்துக்கட்டணம் ஏத்தியதும் புலம்பித்தள்ளியவர்கள் இப்ப சகஜமாகி பயணத்தை தொடர்வது வியப்பைத்தந்தாலும், நம்மால் என்ன செய்யமுடியும் என்ற மக்களின் ஆதங்கம் கண் முன்னே விரிந்தது.இப்படித்தான் போராட எவ்வளவோ விஷயங்கள் இருந்தும் ஒரு சிலர் தான் போராடவும் குரல் கொடுக்கவும் செய்கிறார்கள்.மக்களைப்பொருத்தவரை அவர்களுக்கெல்லாம் நேரமிருக்கிறது நமக்கெல்லாம் வேலையிருக்கிறது என்ற எண்ணம்.

                  
மனதுக்குள் ஏதேதோ ஓடிக்கொண்டிருக்க சட்டென்று எல்லோரும் பரபரப்பானார்கள்.ஆமாம் பேருந்துதான் வந்தது.இடம் பிடிக்க என்னென்ன தகிடுதத்தம் செய்ய முடியுமோ எல்லாம் நிகழ்ந்தது.பயிற்சியில்லாத நான் தோற்றுப்போனேன்.சரி யாராவது ஒருத்தர் தனி ஆளா சீட்டு போட்டிருப்பார் என நினைத்து பஸ்சுக்குள் நுழைந்து துழாவினேன்.ரெண்டு ஆள் சீட் ஒன்றில் ஒரு துண்டு கிடந்தது.சரி இதில் உக்காந்துக்குவோம் ஒருத்தரா இருந்தா நம்ம அதிர்ஷ்டம் இல்லேன்னா இறங்கி அடுத்த வண்டியப்பாப்போம்னு அந்த சீட்டில் அமர்ந்தேன்.
              

கூட்டத்தில் ஒருத்தரு என்னைப்பாத்துக்கிட்டே வந்தாரு.அவரு மட்டும் இந்த சீட் போட்டவரா இருக்கக்கூடாதுன்னு நினைச்சுக்கிட்டேன்.ஏன்னா அவர பாத்தவுடனே தெரிஞ்சுது நல்லா குடிசிருக்காருன்னு,அதுக்குள்ளே பஸ் வேற கிளம்பிடுச்சு,எதிர்பார்த்த(பார்க்காத)மாதிரியே அவருதான் என் பக்கத்தில வந்து ஒக்காந்தாரு.எந்த ஊரு தம்பி?என்றார்.எனக்கு அடிக்காமலே போதை ஏறியது.ஊரை சொன்னேன்.அட எனக்கும் பக்கத்து ஊர்தான் என ஆரமித்து பேச இல்லை உளற ஆரம்பித்தார்.நடுவில் கண்டக்டரிடம் இருபது ரூபாய் கொடுத்து விட்டு நூறு ரூபாய் என பஞ்சாயத்து வேறு.என்னை என்ன குடிசிருக்கேன் ன்னு ஏமாத்தப்பாக்குறியா?இல்ல என்கிட்டே காசு இருக்காதுன்னு நெனைக்கறியா என டவுசர் பாக்கெட்டிலிருந்து ஒரு நூறு ரூபா கட்டு எடுத்து ஆட்டிக்கொண்டே பாத்தியா?ன்னார்.நான் ஜன்னலோரம் திரும்ப கண்டக்டர் என்னைய கோத்துவிட்டார் .வேண்ணா அவரையே கேட்டுப்பாரு அப்படின்னார்.ஏந்தம்பி நான் எவ்வளவு கொடுத்தேன் நீங்க சொல்லுங்க நான் கேக்குறேன் வேற எவன் சொன்னாலும் கேக்க மாட்டேன்.நான் இருவது ரூவாதாங்க கொடுத்தீங்கன்னேன்.இந்த படிச்ச புள்ள சொல்றதால விடறேன்.யாரையும் ஏமாத்தக்கூடாது தெரியுதா?நீங்களாவது சொல்றீங்கலேன்னு மனசுக்குள் சந்தோசம் பின்னே கம்பெனியில நீயெல்லாம் என்னத்த படிச்சுட்டு வந்தேன்னு கேக்குராங்களே?

                    

பஞ்சாயத்து முடித்து உக்கார்ந்தவர் பணத்தை மேல்பாக்கேட்டில் வைத்தார்.அது வெளியே துருத்திக்கொண்டு இருந்தது.செல்போனை எடுத்து பேச ஆரமித்தார்,அவரது மனைவி போலிருக்கிறது,குடித்திருப்பதை கண்டிபிடித்து திட்டுவதும் இவர் கெஞ்சுவதும் அவரது பேச்சில் தெரிந்தது.பேசி முடித்து செல்போனையும் சட்டைப்பாக்கேட்டிலே வைத்தார் ஏற்கனவே பணம் துருத்திக்கொண்டிருக்க இப்போ பணமும் செல்போனும் கீழே விழும்படி இருந்தது.சொல்லலாமா வேணாமா என மனதுக்குள் பட்டி மன்றம் நடத்தி.ஏங்க பணம் விழப்போகுதுன்னு சொன்னேன்.ம்ம்ம்என்னதான் தன்னியடிசாலும் நான் ஸ்டடியா இருப்பேன் ன்னார்.இதுக்குதான் யோசிச்சேன்.சரி நமக்கென்னன்னு மேலே பேசுவதை தவிர்த்து ஜன்னலோரமாய் பார்வையை திருப்பிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டேன்.அவர் தூங்கி தூங்கி மேலே விழுந்தவண்ணம் இருந்தார்.
பணத்தையும் கவனித்தபாடில்லை.நல்ல வேளையாக எனது ஊர் வந்தது.அப்பாடா என இறங்கிக்கொண்டேன்.


ரெண்டுஊர் தள்ளி கண்டக்டர் தூங்கிக்கொண்டிருந்தவரின் தோளைதட்டி யோவ ஊர் வந்துடுச்சுய்யா!எறங்குன்னு அதட்ட அரக்கப்பரக்க இறங்கினார்.எறங்குகையில் பாக்கெட்டைத்தொட்டவர் அதிர்ந்து அய்யய்யோ என் பணத்தையும் போனையும் காணோம் என அலறினார்!பாக்கேட்டுலதான் வைச்சிருந்தேன் எங்க போச்சுன்னு தெரியலையே,அதை வைச்சுத்தான இந்த மாசம் வூட்டுல பொழப்பு நடத்தணும்னு தெளிந்து புலம்பினார்.யோவ பணத்த வைச்சுக்கிட்டு ஒழுங்கா வராம இப்படி போதைய போட்டுக்கிட்டு வந்தா இப்படிதான்யா நடக்கும்.பக்கத்துல யாரு இருந்தா தெரியுமா?தெரியல்லையா பக்கத்து ஊர் தம்பி பாத்தா படிச்ச புள்ளை மாதிரி இருந்தது.பக்கத்து ஊரும இருக்கிறது ஏன்யா இப்பல்லாம் திருடன்லாம் படிச்சவன் மாதிரித்தான்யா வேசம் போடுறான்.நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும் பொ இப்ப புலம்பி என்ன பண்றது எறங்கு டைம் ஆகுதுன்னு எறக்கிவிட்டுட்டு பஸ் புறப்பட்டது.

                     
 ஐயோ புள்ளைக்கு ஸ்கூலுக்கு,வீட்டுக்கு சாப்பாடுக்கு எல்லாத்துக்கும் வைச்சிருந்த பணம் இப்படிபோச்சே ன்னு கதறினான்.புலம்பியபடி வீட்டைநோக்கி நடையைகட்டினான்.வீட்டுக்குப்போனவுடன் பொண்டாட்டியையும்,குழந்தையும் பார்த்தவுடன் அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.பணமெல்லாம் போச்சுடி கண்ணு,இந்த பாழாப் போன குடியால எல்லாம் போச்சுடி ன்னு புலம்ப ஆரம்மித்தான்.சத்தியமா இனிமே குடிக்க மாட்டேன்டி நம்ம புள்ளை மேல சத்தியம்.


                   
இனி நடந்தது........
அடுத்தநாள் காலை அவனது மனைவியின் செல்போன் அடித்தது.பேசியது கபிலன் தான்.ஊர் பேருந்து நிலையத்தில் இருப்பதாக கூறி தான் தான் பணத்தையும் செல்போனையும் எடுத்த்துச்சென்றதாய் கூறி வந்து வாங்கிக்கொல்லுமாறு கூறினான்.போய் பணத்தை வாங்கிக்கொண்டு ஐயா சாமி என் கண்ணை தொறந்துட்டய்யா இனிமே வாழ்க்கையில குடிப்பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன்னு சொன்னான்.
கபிலன் மனதுக்குள் குடிகாரன் பேச்சு விடிஞ்சாப்போச்சு பழமொழி நினைவுக்கு வந்தாலும் ஒரு மனநிறைவுடன் பேருந்துக்கு காத்திருக்க ஆரம்பித்தான்.



மேலும் வாசிக்க "குடிகாரன் பேச்சு விடிஞ்சா ???"