நந்தனுக்கு கல்லூரி முடியும் தருணத்தில் அவனது அக்கா வீட்டு புதுமனை புகும் நிகழ்வு வந்தது.இந்த மாதிரி குடும்ப நிகழ்வுகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை இருக்குமே.அக்காவின் புது வீடு அந்த ஊர் பஸ்ஸ்டாண்டிலிருந்து ரெண்டு கி.மீ.தூரம்.அதனால நிகழ்ச்சிக்கு வருபவர்களை பஸ்ஸ்டாண்டுல இருந்து டூ வீலர்ல கூட்டிட்டு வரணும்.இந்த பொறுப்பை மாமாட்ட சொல்லி எப்படியாவது வாங்கிடம்னு மாமாக்கிட்ட,”மாமா நான் வர்றவங்கள பஸ்ஸ்டாண்டில இருந்து வண்டியில கூட்டிட்டு வந்துடறேன்” அப்படின்னான்.டே,உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா?அப்படின்னு மாமா கேக்க,என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க,பாருங்க லைசென்ஸ் வைச்சிருக்கேன்.அப்படின்னான் நந்தன்.என்னடா ஆட்சி பிடிக்க கட்சி ஆரம்பிச்சா போதும்ங்கற மாதிரி சொல்ற.சரி ஓகே.சரி,சரி நீயும் செல்வாவும் இந்த வேலையை பாத்துக்கங்க.இந்தா சாவி.இன்னொரு சாவியை அவன்கிட்ட கொடுத்துடு.அவன்கிட்ட கொடுத்துடு.
சந்தோசமாக சாவியை வாங்கிக்கிட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணிட்டு திருதிருன்னு முழிச்சான்.என்னடா முழிச்சுக்கிட்டு நிக்கறன்னு மாமா கேக்க ஒண்ணுமில்ல மாமா கியர் விழல அப்படின்னான்.பாத்தா பின்னாடி காலை வைச்சு அமுக்கு அமுக்குன்னு அமுக்கிகிட்டு இருந்தான்.டே,டே,கியர் லிவர ஓடச்சுடாதடா,இந்த வண்டியில கியர் முன்னால அமுக்கனும் அப்படின்னார்.டே,வண்டி ஒட்டுவியாடா?ஆரம்பமே சரியில்லையேனு மாமா பதற ,அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா நான் ஓட்டுன வண்டியில கியர் பின்னால அதான் சின்ன குழப்பம்.அப்படின்னு சமாளித்து கிளம்பினான்.
போயிட்டு வந்ததும்,ஒரு வழியா போயிட்டு வந்துட்டியாடா,பரவால்லியே,சரி சரி வேற யாரும் வந்து போன் பண்ணா போய் கூட்டிட்டு வா நான் பந்தல்காரங்களை பாத்துட்டு வரேன் அப்படின்னு வண்டியை எடுத்துக்கிட்டு கிளம்பினார்.இப்ப இருந்தது செல்வாக்கிட்ட கொடுக்க சொன்ன வண்டி.நமக்கு அடிச்சதுடா அதிர்ஷ்டம் ஒரே நாள்ல ரெண்டு வண்டி ஓட்ட வாய்ப்புனு பூரிப்படைந்தான்.சின்னதாத்தா வந்திருப்பதாக போன்வர போய் கூட்டி வந்தான்.வருவதற்குள் மாமாவும் வந்திருக்க என்னடா இந்த வண்டியில கியர் ஒழுங்கா போட்டு ஒட்டுனியா?அப்படின்னார்.ஒன்னும் பிரச்சினையில்ல மாமா ஆனா நாளாவது கியர்ல போகும் போது கூட வண்டி முக்குது என நந்தன் கேக்க,அடப்பாவி இதுல அஞ்சு கியர் இருக்குடா.பெட்ரோல் விக்குற விலையில இப்படி ஒட்டுனா லிட்டருக்கு முப்பது கி.மீ.கூட கொடுக்காதுடா அப்படின்னு மாமா எகிற விடுங்க மாமா அடுத்தமுறை பாத்துக்கலாம்னு சமாதானப்படுத்தினான்.
இந்த முறை செல்வா ஒரு வண்டியும்,மாமாவின் தம்பி இன்னொரு வண்டியும் எடுத்துக்கொண்டு எங்கோ சென்றுவிட,சித்தி வந்திருப்பதாக அழைப்பு வந்தது.பெரியப்பா வந்திருந்த வண்டியை கொடுத்து போய் கூட்டி வருமாறு சொன்னார்.நந்தனுக்கு சந்தோசமோ சந்தோசம் பின்னே கியர் வண்டியே ஓட்ட வாய்ப்பு இல்லாமலிருந்தவனுக்கு இன்றைக்கு மூணாவது வண்டி.ஸ்டார்ட் பண்ணிட்டு கொஞ்ச தூரம் போயிட்டு திரும்பி வந்தான்.மாமா என்னடா என்ன ஆச்சுனு கேக்க,மாமா இந்த வண்டியில பர்ஸ்ட் கியருக்கு மேல விழமாட்டேங்குது என்னன்னு பாருங்க அப்படின்னான்.ஒரு முறை முறைச்சுட்டு டே உன்ன கொல்லப்போறேன்,இந்த வண்டியில முத கியர் பின்னாடி மத்ததெல்லாம் முன்னாடினு கத்தினார்.ஹிஹி சரி மாமா விடுங்க மாமா.போயிட்டு வந்துடறேன்.( எவண்டா ஒவ்வொரு வண்டிக்கும் ஒவ்வொரு மாதிரி கியர் வைச்சான்).
ஒரு வழியா நிகழ்ச்சி முடிஞ்சுது.ஊர்ல இருந்து அத்தை கொஞ்சம் லேட்டா வந்து போன் பண்ணாங்க.அந்த நேரம் பாத்து எந்த வண்டியும் இல்ல.மாமா பக்கத்து வீட்டுல ஒரு வண்டி வாங்கி வந்து போடா போய் அத்தையை கூட்டிட்டு வா,எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு அப்படின்னு நந்தன்கிட்ட சொன்னார்.(இன்னமுமா இந்த உலகம் நம்மை நம்புது)சரி மாமா இதோ போய் வந்துடறேன் சாவி கொடுங்க.கொஞ்ச நேரம் வண்டியை சுத்தி சுத்தி பாத்துட்டு கேக்கலாமா வேணாமான்னு கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு இருந்தான்.நந்தன் தயங்கி தயங்கி நிக்குறத பாத்தா மாமா டே என்னடா இன்னும் நின்னுக்கிட்டு இருக்க?இந்த வண்டியில கியர் இல்ல மாமா?அப்படின்னான்,டே என்னடா இந்த இளநில தண்ணி வரலன்னு சொல்ற மாதிரி சொல்ற இது ஸ்கூட்டி பெப்டா இதுக்கு கியர் கிடையாது.அத சொல்லலாம்ல ரொம்ப நேரமா தேடிக்கிட்டு இருக்கோம்ல னு சொல்ல அத்தைக்கு போன் போட்ட மாமா ,நீங்க கொஞ்சம் சிரமம் பாக்காம நடந்தே வந்துடுங்க அப்படின்னு போன் வைச்சுட்டு நந்தனை ஒரு பார்வை பார்த்துட்டு போய்விட்டார்.
| Tweet | ||||||






