Friday, July 15, 2011

கருகிய தளிர்களுக்காக....

      
     

பத்து மாசஞ் சுமந்து
பொத்திப்பொத்தி வளர்த்து
உனக்கு பலி குடுக்கவா
ஊட்டிஊட்டி வளத்தேன்?



பள்ளிக்கூடம் போன புள்ள
படிசிப்புட்டு திரும்புமுனு
பாதயெல்லாங் கண்ணுவச்சு
பாத்திருந்தவ நெனப்பயயெல்லாம்
பொசுக்க்கிப்புட்டுபோயிட்டியே
பொல்லாத நெருப்பே!
கோயில் கோயிலா ஏறி
கும்பிட்டு பெத்த மவ
தவந்தவமா இருந்து
தங்கமாட்டம் பெத்த பய
எனக்கு கொள்ளிபோடுவான்னு
நினைச்சுகிட்டு இருந்தேனே
நெனப்பயயெல்லாம் கருக்கிப்புட்ட
நன்றி கெட்ட நெருப்பே!

பாலூட்டி தேனூட்டி
பசுந்நெய்ய கலந்தூட்டி
பாசத்தோடு வளத்த புள்ள
பாடையில பாக்கையில
பத்திகிட்டு எரியுதே வயிறு
பாவஞ்செஞ்ச நெருப்பே!



கொலைகாரன் கொள்ளகாரன்
கயவர்கள் பலர் இருக்க
மழலை மொழி மாறாத
மலராத மொட்டுக்களை
மூச்சடக்க்க வச்சுட்டியே
மூள கெட்ட நெருப்பே!


அருமப்புள்ள மூஞ்சி கூட
அடையாளம் தெரியலையே


பெத்த வயிறு எரிய சொல்றேன்
போசுங்கிப்போவ நெருப்பே!!
--
சூலை-16.கும்பகோணம் பள்ளி தீ விபத்து ஏழாம் ஆண்டு நினைவு நாள்
மலர்ந்து மொட்டு கூட  விடாமல் கருகிப்போன அந்த தளிர்களின் ஆன்மா
அமைதியில் உலவிடவும்,சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம் என்பார்கள் தம் பிஞ்சுகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்காகவும்
பிராத்திப்போம் நண்பர்களே!





4 comments:

Anonymous said... Reply to comment

Touching...தொடர்ந்து எழுதுங்கள்..

நேரம் கிடைத்தால் என் வலைப்பக்கம் வந்து போகவும்..

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

அந்த இளம் பிஞ்சுகளுக்காக பிரார்திக்கறேன்

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

அஞ்சலிகள்

மாய உலகம் said... Reply to comment

கொலைகாரன் கொள்ளகாரன்
கயவர்கள் பலர் இருக்க
மழலை மொழி மாறாத
மலராத மொட்டுக்களை
மூச்சடக்க்க வச்சுட்டியே
மூள கெட்ட நெருப்பே!
பெத்த வயிறு எரிய சொல்றேன்போசுங்கிப்போவ நெருப்பே!!-

கனியிருப்ப காய்கவர்ந்தற்று