வணக்கம் நண்பர்களே!ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு உங்களையெல்லாம் சந்திப்பதில்
மகிழ்ச்சி!நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்ள நாகர்கோவில் வரைசென்று
வந்தேன்.இந்த பயணத்தில் எனது சில “கனிவான” அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
விழுப்புரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு(எரனியல்) அனந்தபுரி எக்ஸ்ப்ரஸ்சில் கல்யாண
மாப்பிள்ளையே முன்பதிவு செய்து கொடுத்து நீங்க வந்தா மட்டும் போதும் என அன்பு
காட்டியிருந்ததால் தூரத்தை காரணம் காட்டி மறுக்க முடியவில்லை.அது மட்டுமில்லாம
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் திண்டுக்கல்லை தாண்டியதில்லை.அதனால ஓசியில ஊர்
சுத்தி பாத்துடலாம்னு கிளம்பிட்டேன்.
சென்னையில் இருந்து வரும் நண்பர்களிடம் டிக்கெட் இருந்தது.பிளாட்பாரம் டிக்கெட்
மட்டும் வாங்கிக்கிட்டு,வடிவேல் கடைய எப்ப சார் தொறப்பீங்க கேக்குற மாதிரி.ட்ரெயின்
எப்ப சார் வரும்னு கவுண்டரில் இருக்கவங்கக்கிட்ட கேட்டேன்.(கிளம்புகையில் டி.வி.யில்
விழுப்புரம் வழியே வரும் ரயில்கள் ஒரு மணிநேரம் தாமதமாகும் என செய்தி
ஓடியது).வரும் போது அனவுன்ஸ் பண்ணுவோம்னாங்க(கனிவு).ரயிலில் வரும்
நண்பர்களுக்கு போன் செய்து தாமதம் இல்லையென தெரிந்துகொண்டேன்.காத்திருக்கும்
எல்லோருக்கும் யாராவது ஒருவர் ரயிலில் வருவார்களா?.
ரயில் வந்தது.அவர்கள் சொன்ன அனவுன்ஸ் செய்தார்கள்.எப்படி?பயணிகளின் கனிவான
கவனத்திற்கு திருவனந்தபுரத்தில் இருந்து விழுப்புரம்,தாம்பரம் வழியாக சென்னை வரை
செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தடம் ரெண்டில் வந்து நிற்கும்.அடங்கோ!சென்னையில்
இருந்து வரும் ரயிலை சென்னைக்கு போகும் ரயிலாக கனிவுடன்
அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.கிட்டத்தட்ட பதினைந்து முறை.ஊழியர்கள் யாருக்கும் காது
கேட்காதோ?அல்ல ஏதோ அறிவிச்சா போதும் என்கிற அலட்சியமா?என்னதான் பதிவு
செய்யப்பட்ட கணினியின் குரலாக இருந்தாலும் ஒரு முறை கேட்டவுடனாவது
மாற்றியிருக்க வேண்டாமா?ரயில் கிளம்பும் வரை மாற்றவேயில்லை.பலர் சந்தேகத்துடன்
கடைசி நேர பரபரப்பில் அவதிப்பட்டார்கள்.(இதுதானா சார் உங்க அனவுன்சு என மனசுக்குள்
அனவுன்சு பண்ணுவோம் என சொன்னவரை கேட்டுக்கொண்டேன்)
இன்னொரு கனிவு திருநெல்வேலி சந்திப்பில்.கால்மணி நேரம் அங்கே ரயில்
நின்றது.மற்றொரு பாசஞ்சர் அங்கிருந்து தூத்துக்குடிக்கு கிளம்பியது.ரயில் கிளம்பி பத்து
நிமிடங்களாகியும்,இன்னும் சற்று நேரத்தில் தூத்துக்குடி பாசஞ்சர் கிளம்பும் என கனிவாக
அறிவித்துக்கொண்டிருந்தார்கள்(யாருமில்லா கடையில் டீ).
திரும்ப வருகையில் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்ல்
பயணம்.ரயில் நிலையத்தில் ரயில் பிளாட்பாரத்தில் நிற்கும் கோச் எண் காட்டப்படும்
டிஸ்ப்ளே வேலைசெய்யவில்லை.ஒருவர் போய் கேட்டார்.வேளை செய்யவில்லையா என
அதுக்கு ஹெல்ப் கவுண்டரில் இருந்தவர் போடவில்லை என்றார்.பக்கத்திலிருந்த ஊழியர்
ஒருவர் என்னவாம்?என்றார்.டிஸ்ப்ளே வேலை செய்யவில்லையாம் என்றார்.கேட்டவரது
கனிவான பதில் ரொம்ப முக்கியம்..ஆமாங்க ரொம்ப முக்கியம் தான்னு
சொன்னதுக்கப்புறம் முனகிக்கிட்டே ஆன் பண்ணாங்க.முக்கியமில்லேன்னா எதுக்குங்க
பணத்தை வீணாக்கி செலவு பண்ணி வைக்கணும்.ஒரு பட்டன தட்ட என்னா ஒரு
அலட்சியம்?
இரவு நேரங்களில் பல ரயில் நிறுத்தங்களில் ரயில் வந்து புறப்படும் அறிப்விப்புகள்
செய்யப்படவில்லை.(எல்லா நிறுத்தங்களிலும் அல்ல).இதனால் தூங்கும் பயணிகள்
ஸ்டேஷனை தவறவிட வாய்ப்பு அதிகம்.நான் வந்திறங்கிய விழுப்புரம் சந்திப்பிலும் ரயில்
வந்து கிளம்பிய வரை எந்த அறிவிப்பும் இல்லை.(நேரம் காலை நான்கு மணி)
எங்கே இருக்கிறது கனிவு?வெறும் அறிவிப்பில் மட்டும் தானா?
பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த போவதாக பேச்சு அடிபடுகிறது போல தெரிகிறது.ம்ம்ம்.
| Tweet | ||||||



